இசையின் கடவுள் ராஜா .!






ஒரு திரைப்படத்தின் 40 சதவிகித பணியை இசையே நிறைவேற்றும் .வார்த்தைகளால் நிரப்ப முடியாத உணர்வுகளை இசை நிரப்பும் .மொழி அறியாது ,இனம் அறியாது ஆனாலும் உங்களை வசிய செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு .

சென்னையில் இருந்து கோவை பயணம் .பேருந்தில்  அருகில் அமர்ந்தவர் அறுபது வயது இருக்கலாம் .ஏறி  அமர்ந்த நொடி  காதில் earphone -ஐ மாட்டிக்கொண்டார் .பேருந்து செங்கல்பட்டை தாண்டுவதற்குள் கண்ணில் வழியும் நீரை, குறைந்தது இருபது முறையாவது துடைத்துக் கொண்டார் .

பொறுக்கமாட்டாமல் என்ன பிரச்சனை என்று கேட்டே விட்டேன் .சிறு பிள்ளையை போல் அழ தொடங்கி விட்டார் .மூடு பனி வந்த சமயத்துல கல்யாணம் ஆச்சு தம்பி .என் பொண்டாடிக்கு ராஜா பாட்டுன அவ்ளோ பிடிக்கும் .என் இனிய பொன் நிலவே எங்க பாடுனாலும் நின்னு கேட்டுட்டு வருவா .சில சமயம் என்னையும் பாட சொல்லுவா .

"பன்னீரைத் தூவும் மழை ஜில்லேன்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இன்னேரமே
என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை
என் ஆசை உன்னொரமே"


இந்த வரி பாடி முடிக்கும் போது என்ன பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பா தம்பி .என் உயிர் என் கைல இருக்காது .செத்து 24 வருஷம்  ஆச்சு .இந்த பாட்டுல தான் தினம் அவல நினச்சி வாழ்ந்துட்டு இருக்கேன் .ஒரு வேல இந்த பாட்டும் இல்லன நானும் எப்போவோ போய் சேர்ந்து இருப்பேன் .ஆனா ஒன்னு தம்பி என்ன மாதிரி எத்தனையோ பேர அந்த மகராசன் வாழ வச்சிட்டு இருக்கான் .நல்லா இருக்கணும் .என்று சொல்லி மறுபடியும் பாட்டுக் கேட்க் தொடங்கி விட்டார் .

உண்மையில் இளையராஜா குறித்து சிந்திக்கும் பொழுது எல்லாம் வியப்பு தட்டுகிறது .எப்படி ஒரு மனிதன் எல்லா ஆன்மாக்களையும் இசையால் கட்டிப் போட முடிந்தது .வருடத்தில் லட்சம் பேர் இசை கற்கிறார்கள் யாரும் இளையராஜா போல் வருவது இல்லை .

நாயகன் படத்தில் தென்பாண்டி சீமையிலே பாடல்  தொடங்கும் இடம் நம்மை நிலைக்குலைய செய்வார் .அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் உன்னை நினைத்தேன் பாட்டு படித்தேன் கமல் முதல் வரியை தொடங்கும் பொழுதே சோகம் நம் மனதை கவ்விக்கொள்ளும் .மேல சொன்ன இருக்காட்சிகளையும் இளையராஜாவின் இசை இல்லாமல் வேறு எதைக் கொண்டும் நிரப்ப முடியாது .

நம்மை அழ செய்கிறார் ,சிரிக்க செய்கிறார் ,நாம் எங்கையோ தொலைத்த உறவுகளை ,ஆழ் மனதில் தேங்கி இருக்கும் சோகத்தை ,பிரிந்த காதலை  இப்படி ஆயிரம் ஆயிரம் காரணங்களுக்கு இளையராஜா நம்மோடு பயணம் செய்கிறார் .

தெரிந்த ஒருவரின் தாயார் மறைந்து விட்டார் .தாய் இறந்த சோகம் ஒரு துளி கூட இல்லை ,மிக இயல்பாக ,வந்தவர் அனைவரிடமும் சாதாரணமாக் பேசிக்கொண்டு இருந்தார் .தீமூட்டும் நேரத்தில் கூட சலனம் இல்லாமல் இருந்தார் .எப்படி அம்மாவின் மரணத்தை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது இந்த மனிதனால் என்று எண்ணிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் .

பதினாறாம் நாள் அழைத்து இருந்தார் ,பந்தல் ,பாட்டு என இறந்தவரின் நினைவை மறந்து அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர் ,நான் அவரின் பக்கத்தில் அமர்ந்து இருந்தேன் .அவர் அங்கே இருந்த அம்மாவின்  படத்தையே  பார்த்துக் கொண்டு இருந்தார் .

ஸ்பீக்கரில் "என் தாய் என்னும் கோவிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே "என்று பாட்டு தொடங்கியே நேரம் .அதுவரை அமைதியாய் இருந்த மனிதன் பெருங்குரலோடு "அம்மம்ம்மா .......என்று படத்தின் முன் மண்டியிட்டு சிறுபிள்ளை தேம்பி தேம்பி அழ தொடங்கி விட்டார் .யார் தடுத்தும் அழுகையை நிறுத்த முடியவில்லை .

அத்தனை கட்டுக்கோப்பான மனதை கூட இசையால் கரைக்க முடியுமென்றால் .....

ஆம் ராஜா கடவுள் தான் ,

Comments

Popular posts from this blog

திரைக்கதை அமைப்பது எப்படி ?

திரைக்கதையின் மாதிரி வடிவம் கிடைக்குமா ?

எது உலக சினிமா ?